
சென்னை,
தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் தனுஷ் நடித்த குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது. அனிமல், புஷ்பா 2-க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றி படத்தை குபேரா படம் மூலம்கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக இருக்கும் ஒரு கதைக்களத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்பார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கான அறிவிப்பு, மிக வித்தியாசமான போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா ஒரு வாளை கையில் ஏந்தி, வலிமையான மற்றும் போராட்ட முகத்துடன் காட்சியளிக்கிறார்.அதில் மிகவும் ஆக்ரோஷத்துடன் கையில் ஒரு ஆயுதத்தை வைத்து இருக்கிறார். இவரை சுற்றி பல அடியாட்கள் இவரை தாக்க வரும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தை அறிமுக இயக்குநரான ரவிந்திரா புல்லே இயக்குகிறார்.
படத்தின் போஸ்டரை பகிர்ந்து, ராஷ்மிகா "நாங்கள் எந்த மாதிரி வேலை செய்திருக்கோம் என்பதை உங்களுக்குக் காட்டும் நேரம் வந்தாச்சு! இது வரைக்கும் நீங்க பார்த்திருக்காத ஒரு புதிய ராஷ்மிகாவை… இதில் பார்க்கலாம். நானும் ரொம்பவே எக்ஸைட்டடா இருக்கேன்!" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களிடம் அவர் ஒரு சவாலையும் விடுத்துள்ளார். "என் அடுத்த படத்துக்கான பெயரை கண்டுபிடிக்க முடியுமா? யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்… ஆனால் யாராவது கண்டுபிடித்தால், நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன்! " என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் இணையம் முழுக்க தாங்கள் கணித்த தலைப்பை பதிவிட்டு, வைரலாக்கி வருகின்றனர்.படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற விவரங்களும் நாளை வெளியாகவுள்ளன.