திருவொற்றியூர்: ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க, சென்னை துறைமுகத்திற்கு குத்தகை, வைப்பு தொகையாக ரூ.7.73 கோடியை சென்னை மாநகராட்சி செலுத்தியது. சென்னையின் மிக பழமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்து வருகிறது. 1964ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்ப காலகட்டத்தில் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், இடப் பற்றாக்குறை காரணமாக, அங்கிருந்து செல்லும் வெளியூர் பேருந்துகள் கோயம்பேடுக்கு மாற்றப்பட்டன.
தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் மூடிவிட்டு, வெளியூர் பேருந்துகள் செல்லும் முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் நிலையமும் அமைக்கப்பட்டதால், பிராட்வே பேருந்து நிலையம் மாநகர பேருந்துகள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அருகே கொத்தவால்சாவடி மற்றும் மலர் சந்தைகள் இருப்பதால் இந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், தற்போது செயல்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி இங்கு ‘‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது. அதாவது, பிராட்வே பேருந்து நிலையத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் காலத்தில், பயணிகளின் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி ஏற்கனவே திட்டமிட்டது. இதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டது.
ஆனால், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டது. 1,400 ச.மீ. பரப்பளவில் 57 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ளது. பயணிகள், பேருந்துகள் இடையூறின்றி வந்து செல்ல 3 நுழைவாயில்களுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பயணிகளின் வசதிக்காக காத்திருப்பு பகுதி, கழிவறைகள், டைம் கீப்பர் அறை, குடிநீர், இருக்கை வசதி, மேற்கூரைகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை துறைமுகம் சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 14,014 சதுர மீட்டர் பரப்பளவில் இப்ராஹீம் சாலையில் அமைந்துள்ள இடம் சென்னை மாநகராட்சிக்கு 3 ஆண்டுகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான குத்தகை தொகை ஒரு சதுர மீட்டருக்கு ரூ.230 ஜிஎஸ்டி சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர வாடகை ரூ.230 X 14,014 சதுர மீட்டர் X 12 = ரூ.3,86,78,640 ஆகும். மேலும், வருடந்தோறும் 2% வாடகை அதிகரிகப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குத்தகை ஆண்டு முடிவதற்குள் அடுத்த குத்தகை தொகையினை செலுத்தவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மாத குத்தகை வாடகையை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்தக்கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.3,86,78,640 X 2 = ரூ.7,73,57,280.
இவ்வாறு துறைமுகம் சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கான தொகையை சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று செலுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த இடத்தில் பணிகளை தொடங்க சென்னை துறைமுகம் சார்பில் பணி ஆணை இன்று வழங்கப்படவுள்ளது. பணி ஆணை வழங்கப்பட்ட பின் சென்னை மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் அடுத்த 6 மாதத்திற்குள் முடிவடையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post ராயபுரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் துறைமுகத்திற்கு ரூ.7.73 கோடி குத்தகை, வைப்பு தொகை: மாநகராட்சி செலுத்தியது appeared first on Dinakaran.