ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுகின்றனர். இதனை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் ஒருசில நேரங்களில் இலங்கை கடற்படையினர் ஒருபடிக்கு மேல் சென்று தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இலங்கை கடற்படை தாக்குதலால் படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திருப்பியுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.