பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போலீசார் கண்காணித்து ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் உத்தரவின்படி, தொடர்ந்து சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டேரி கண்ணப்பன் தெரு பகுதியில் சோதனை நடத்தி ரவுடி விஜய் என்ற புலி பாண்டி (20) கைது செய்தனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ்குமார் (23), திருவள்ளூர் மாவட்டம் பூச்சி அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த அருண் (30), ஓட்டேரி ஸ்டிபன்சன் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கின்ற பரோட்டா சீனி (27) ஆகியோரை கைது செய்தனர்.
புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியை சேர்ந்த சரவணன் (19), மணிகண்டன் என்கின்ற கருப்பாமணி (36), சரத் என்கின்ற சரத்குமார் (26), மணிகண்டன் என்கின்ற பல்லு மணி (20), அந்தோணி (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி கருணாநிதி சாலை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற பாங்கா (30), ரமேஷ் என்கின்ற கரிமட்ட ரமேஷ் (28), வியாசர்பாடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராயல் என்கின்ற ராஜேஷ் (23), சந்திரன் என்கின்ற எலி சந்திரன் (22), முத்து (26) ஆகியோரை கைது செய்தனர்.
புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (31) கைது செய்தனர். இவர் பிரபல ரவுடி பாம் சரவணனின் கூட்டாளியாவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. மேற்கண்ட 15 பேரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் என்பதும் இவர்களை கண்காணித்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒரே இரவில் ‘’ஸ்பெஷல் டிரைவ்’’ என்ற பெயரில் குழு அமைத்து கைது செய்துள்ளனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post புளியந்தோப்பு சரகத்தில் பாம் சரவணனின் கூட்டாளி உள்பட ஒரே இரவில் 15 ரவுடிகள் கைது: “ஸ்பெஷல் டிரைவ்’’ நடவடிக்கை appeared first on Dinakaran.