ராமேஸ்வரம்: நடுக்கடலில் நேற்றிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பதும், மீனவர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டு சிறையில் தமிழக மீனவர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது விசைப் படகுகளும் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாத நிலையில் நிரந்தர தீர்வு எட்ட முடியவில்லை.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கடந்த 14ம் தேதி கடலுக்கு செல்ல திட்டமிட்ட நிலையில், வானிலை எச்சரிக்கையால் செல்ல முடியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு பிறகு வானிலை சீராகி, தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்ட பிறகே படிப்படியாக கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் எதிர்பார்த்த அளவில் மீன்பாடு இல்லாமல் மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று நேற்று 466 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
இரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து மீனவர்கள் நகர தொடங்கினர். இருப்பினும், தொடர்ந்து துரத்தி வந்த இலங்கை கடற்படையினர் ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர். அதிலிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் அண்ணாமலை (55), கல்யாணராமன் (45), செய்யது இப்ராஹிம் (35), முனீஸ்வரன் (39), செல்வம் (29), காந்திவேல் (69), படகு உரிமையாளர் ஜேசு (39) உள்ளிட்ட 8 மீனவர்களை கைது செய்து, நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தினர். படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மீனவர்களை படகுடன் மன்னார் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். மேல் நடவடிக்கைக்காக அவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
ஒன்றிய அரசு தலையிட கோரிக்கை;
இரண்டு மாத தடை காலத்திற்கு பிறகு கடலுக்குச் சென்று வரும் ராமேஸ்வரம் மீனவர்கள் போதிய அளவில் மீன்கள் கிடைக்காமல் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து, படகுடன் 8 மீனவர்களை கைதுசெய்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு கடற்படையின் தொடர் ரோந்து நடவடிக்கையால் சரிவர மீன்பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பாடு இன்றி இன்று காலையும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையை ஒன்றிய அரசு கண்டிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.