
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரத்தை சேர்ந்த ஜான் போஸ், சுதன் ஆகிய 2 பேருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் மீன் பிடித்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி (20), நிலாகரன் (44), சேசூ பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார் லோஸ் (21), நிஷாந்த் (28), டுவிஸ்டன் (21) உள்பட 14 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களையும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு விசைப் படகுகள், 14 மீனவர்களும் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து கைதான 14 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து 14 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்படும் சம்பவம், மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.