ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

4 hours ago 1

ராமேசுவரம்,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடத்தில் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

அதன்படிம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பால், 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலும் சுமார் 1½ மாதத்தில் இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் உள்ளிட்ட 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த மீனவர்களின் 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article