ராமேஸ்வரம், ஜூன் 6: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடுகள் நடைபெற்றன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஸ்தல வரலாற்றை பிரதிபலிக்கும் ராமலிங்கப் பிரதிஷ்டை விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமி சன்னதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காசி விஸ்வநாதர் சன்னதியில் மதியம் 12.30 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் லிங்கம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஆஞ்சநேயர் லிங்கத்துடன் மூலவர் சன்னதியை வலம் வந்து சுவாமி கருவறையில் செல்வது தத்ருபமாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, செயல் அலுவலர் முத்துச்சாமி, ஆய்வாளர் சிவக்குமார், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, தபேதார் முத்துக்குமார் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
The post ராமலிங்க பிரதிஷ்டை விழாவில் அனுமன் லிங்கம் எடுத்து வரும் நிகழ்வு appeared first on Dinakaran.