புற்றுநோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரி பழம் கிலோ ரூ.120க்கு விற்பனை

2 hours ago 2

உடன்குடி: தேரிக்காட்டு பகுதியில் விளையும் முந்திரி பழம் உடன்குடி பகுதியில் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொல்லாம்பழம் என்றழைக்கப்படும் முந்திரி பருப்பின் மேல்புறம் விளையும் பழம் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடன் இருக்கும். பெரும்பாலும் தேரி பகுதிகளில் மட்டுமே வளரும் இந்த மரங்கள் ஏப்ரல் மாதம் கடைசியில் துவங்கி மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்கள் வரை கனி தருவது வழக்கம். தேரி பகுதியில் விளையும் இந்தப் பழங்கள் அதிக சுவையுடன் இருப்பதாலும், பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாலும் பழங்களின் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. தேரிப்பகுதியில் இருக்கும் கொல்லாம் பழமரங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மரங்களை குத்தகைக்கு விட்டு பழங்கள், முந்திரி கொட்டைகள் சேகரிக்கபடுவது வழக்கம். கொல்லாம்பழங்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளன.

மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரி பழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது. வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. தேரி காட்டு பகுதியில் விளைந்த இந்த முந்திரி பழம் உடன்குடி பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பழம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தேரி காட்டு பகுதியில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

இந்த பழங்களில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைதல், சரும ஆரோக்கியம் மேம்படுதல் போன்ற பல நன்மைகள் முந்திரிப் பழத்தில் கிடைக்கின்றன’ என்றனர்.

The post புற்றுநோய் தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரி பழம் கிலோ ரூ.120க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article