சென்னை : பாமக மாநாட்டை ஒட்டி ராமதாஸ், அன்புமணி தனித்தனியாக பாடல்களை வெளியிட்ட நிலையில், தற்போது சர்ச்சை முடிவுக்கு வந்தது. பாமகவில், முகுந்தன் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுமேடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். பின்னர், பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையிலான பிரச்சினை சுமூக முடிவை எட்டியதாக அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டார். அதன் பிறகு, சித்திரை மாநாட்டு குழு தலைவராக அன்புமணியை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார்.
இதனிடையே வரும் 11ம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இம்மாநாட்டை ஒட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், “அண்ணன் அன்புமணி அழைக்கிறார்” என்று பாடல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநாட்டை ஒட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், “ஐயா அழைக்கிறார்” என்றே அந்த பாடல் தொடங்குகிறது. இவ்வாறு இருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி தனித்தனியாக வீடியோ வெளியிட்டு இருப்பது, அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் நீடிப்பதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் தற்போது, ராமதாஸை முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு அன்புமணி சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
The post ராமதாஸை முன்னிலைப்படுத்தி புதிய பாடலை வெளியிட்டு சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார் அன்புமணி!! appeared first on Dinakaran.