
சென்னை,
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமென்றால் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் 6 எம்.பி. பதவிகளில் சட்டசபை பலத்திற்கு ஏற்ப தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு பா.ஜனதா ஆதரவுடன் 2 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் போட்டியிடுவார்கள் என்றும், மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அந்த கட்சி அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக சார்பாக போட்டியிட போவது யார்? என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நீடித்தது. தேமுதிகவும் தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக இது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறிவந்தது. ஆனால், அதிமுக தரப்பில் இதனை மறுத்து பேசப்பட்டது.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.