ராஜினாமா செய்ய சொன்ன அமெரிக்க செனட்டர்... பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி

8 hours ago 1

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவடைந்ததால் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவிகளை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால் ரஷியாவுடனான போரில் உக்ரைனின் கதையே வேறு, என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

"நாங்கள் இருப்பதால் போரில் நீடிக்கிறீர்கள். இல்லையொன்றால் இந்த போரில் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை. நீங்கள் மூன்றாம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்று டிரம்ப் காட்டமாக கூறி உள்ளார். இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் வெளியேறினார் ஜெலன்ஸ்கி.

இக்கூட்டத்திற்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சி கிரகாம், உக்ரைன் அதிபரை விமர்சனம் செய்தார்.

உக்ரைன் அதிபர் ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் சரியாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய ஒருவரை அனுப்ப வேண்டும், அல்லது அவர் மனம் மாற வேண்டும் என்று கிரகாம் கூறினார். மேலும், வெள்ளை மாளிகையில் நடந்த விவாதம் 'பேரழிவு' என்று கூறிய அவர், ஜெலன்ஸ்கியின் தலைமை அமெரிக்க-உக்ரைன் உறவுகளுக்கு ஒரு தடையாக மாறிவிட்டதாக கூறினார்.

அமெரிக்க செனட்டர் கூறிய கருத்துக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, 'கிரகாம் நல்ல மனிதர், அவரது கருத்தை மதிக்க விரும்பினால், அவர் உக்ரைன் குடிமகனாகவேண்டும்' என்றார்.

"கிரகாம் உக்ரைனுக்கு வந்தால் நான் அவருக்கு உக்ரைன் குடியுரிமையை வழங்குவேன். அவர் எங்கள் நாட்டின் குடிமகனாக மாறுவார். அதன்பின்னர் அவரது குரல் வலுவடையும். அப்போது, யார் அதிபராக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உக்ரைனின் குடிமகனாக அவர் பேசுவதை நான் கேட்பேன்" என்றார் ஜெலன்ஸ்கி.

இதற்கு பதிலளித்த கிரகாம், "துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் நடைபெறும் வரை, உக்ரைனில் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்க முடியாது" என்றார்.

நீண்டகாலமாக உக்ரைனின் ஆதரவாளராக இருந்த கிரகாம் தற்போது ஜெலன்ஸ்கியின் கடுமையான விமர்சகராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article