தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம், விண்வெளித் தொழில் நிறுவனத்துக்கு உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடன்குடியில் கிராம மக்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே கூடல் நகர், அமராபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள், நிலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசின் தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகக் துறை சார்பில் விண்வெளித் தொழில் நிறுவனம் அமைப்பதற்கு ஆதியாக்குறிச்சி ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.