
புதுடெல்லி,
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். இதில் பங்கேற்ற சீக்கிய வாலிபர் ஒருவர், ராகுல் காந்தியிடம் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்து தாக்குதல் (ஆபரேஷன் புளுஸ்டார்) நடத்தியதுபோது தொடர்பாக சராமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராகுல்காந்தி பதிலளிக்கும்போது, காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல நான் இல்லாத போது நடந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்கிறேன். 1980-ம் ஆண்டுகளில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன். நான் பலமுறை பொற்கோவிலுக்குச் சென்றிருக்கிறேன்,
இந்தியாவில் உள்ள சீக்கிய சமூகத்துடன் எனக்கு மிகவும் நல்ல உறவுகள் உள்ளன. பா.ஜனதா குறித்து சீக்கியர்களிடையே நான் ஒரு பயத்தை உருவாக்குவதாக நீங்கள் கேள்வி கேட்டீர்கள். சீக்கியர்களை எதுவும் பயமுறுத்துவதாக நான் நினைக்கவில்லை .. நான் கூறியது என்னவென்றால் மக்கள் தங்கள் மதத்தை வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கும் ஒரு இந்தியாவை நாம் விரும்புகிறோமா? என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.