
சென்னை,
இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழகத்தின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜனதா அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.