
நார்த்தம்டான்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்திய 'ஏ' அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நார்த்தம்டானில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் களம் இறங்கினர்.
இதில் ராகுல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஜெய்ஸ்வால் 17 ரன், அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன், கருண் நாயர் 40 ரன், துருவ் ஜுரெல் 52 ரன், நிதிஷ் குமார் ரெட்டி 37 ரன், ஷர்துல் தாக்கூர் 19 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ராகுல் சதம் அடித்த நிலையில் 116 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து தனுஷ கோடியான் மற்றும் அன்சுல் கம்போஜ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி 83 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா ஏ தரப்பில் தனுஷ் கோடியான் 5 ரன்னும், அன்சுல் கம்போஜ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.