
தூத்துக்குடி, தாளமுத்துநகர் ஜேசு நகரைச் சேர்ந்த குருஸ்மஸ்தான் மகன் பரிமளம் (வயது 47), மீனவர் ஆவார். இவர் ஜூன் 1-ம்தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து வல்லத்தில் 7 பேருடன் கடலுக்குள் தங்கி மீன் பிடிக்க சென்றார். அவர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு மீனவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சக மீனவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை திரேஸ்புரம் கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென பரிமளம் கடலுக்குள் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த டாக்டர் அவரை பரிசோதித்து பார்த்த பிறகு, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மீனவரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக சக மீனவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.