பெரம்பூர், மே 24: வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. தரைத்தளத்தில் 5 அடிக்கும் கீழே இந்த கோயில் உள்ளதால் கோயிலை தற்போது 9 அடி அளவிற்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு எதிரே திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கட்டிடம் இருந்து வந்தது. அதனை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டும் பணிகள் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி தொடங்கியது. ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் அனைத்தும் முடிவுற்று நேற்று காலை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இந்த திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். 250 பேர் வரை உட்காரும் வசதி கொண்ட இந்த திருமண மண்டபம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
வியாசர்பாடி பகுதியில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிப்பதால் மிகவும் குறைவான விலையில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை நடத்திக் கொள்ள இந்த திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், ரவீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த திருமண மண்டபம் அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும், இதனை இப்பகுதி மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தி, ஷர்மிளா காந்தி, மலைச்சாமி, ஜீவன், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் பழனி, இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், கோயில் நிலைய அதிகாரி ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ரவீஸ்வரர் கோயிலில் ரூ.56 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதியுடன் புதிய திருமண மண்டபம்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.