சென்னை:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாவட்டத்தில், வசித்துவரும் நான்கு மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6ம் தேதி அன்று பிற்பகல் கோயம்புத்தூர்-திருப்பதி விரைவு ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார்.
அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார், அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று(நேற்று முன்தினம்) கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணிற்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இந்தக் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ரயில் பெட்டியில் இருந்து கீழே தள்ளி பலத்த காயமடைந்த கர்ப்பிணிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: மருத்துவ செலவுகள் முழுவதையும் அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.