வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி ரேவதியின் கருவில் 4 மாத சிசு இறந்ததால் பாதுகாப்புடன் அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்தனர். ரயில்களில் பெண்கள் பெட்டியில் தனி ஒரு பெண் பயணித்தால் காவலர் உடன் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை காலை புறப்பட்டார்.