
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா தனது முதல் இன்னிங்சில் 123.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
விதர்பா தரப்பில் அதிகபட்சமாக டேனிஷ் மலேவர் 153 ரன் எடுத்தார். கேரளா தரப்பில் நித்தேஷ், ஈடன் ஆப்பிள் டாம் தலா 3 விக்கெட்டும், பாசில் 2 விக்கெட்டும், ஜலஜ் சக்சேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கேரள அணி 125 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 342 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கேரளா தரப்பில் அதிகபட்சமாக சச்சின் பேபி 98 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் ஹார்ஷ் துபே, தர்ஷன் நல்கண்டே, பார்த் ரகடே ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றது. 37 ரன் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா நேற்றைய 4ம் நாள் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 249 ரன்கள் எடுத்தது.
விதர்பா தரப்பில் கருண் நாயர் 132 ரன்னுடனும், அக்சய் வட்கர் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் பெற்ற 37 ரன் முன்னிலையுடன் சேர்த்து விதர்பா 286 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில், 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விதர்பா அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது.
இதில் கருண் நாயர் 135 ரன்னிலும், அக்சய் வட்கர் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஹார்ஷ் துபே 4 ரன், அக்சய் கர்னேவர் 30 ரன், நச்சிகேட் பூடே 3 ரன் எடுத்து அவுட் ஆகினர். மற்புறம் தர்ஷன் நல்கண்டே அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் விதர்பா தனது 2வது இன்னிங்சில் 143.5 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 375 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்து கொள்ள இரு கேப்டன்களும் ஒப்புகொண்டனர்.
இதையடுத்து ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது. விதர்பா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் காரணமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது டேனிஷ் மலேவருக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஹார்ஷ் துபேவுக்கும் வழங்கப்பட்டது.