
சென்னை,
2024-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று வெளியான இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் 2-ம் இடமும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள்.
தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா, தேசிய அளவில் 39-வது இடம் பிடித்துள்ளார்.