“நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறேன்” கடந்த 18-ம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி இப்படி பேசியதை வைத்து நாமக்கல் திமுக வட்டாரத்தில் பெரும் விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்ட திமுக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும் வரும் 6 தொகுதிகளையும் வென்றெடுக்கும் பொறுப்பில் இருக்கும் செந்தில்பாலாஜி, மேற்கு மாவட்டத்துக்கு மட்டும் தனி கவனம் செலுத்தப் போவதாகச் சொன்னதன் பின்னணியில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி இருக்கிறார் என்று ஒரு தரப்பும், மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தியை இம்முறை தெறிக்கவிட வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில்பாலாஜி அப்படிப் பேசினார் என்று ஒருதரப்பும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக-வினர் சிலர், “மேற்கு மாவட்டச் செயலாளரான மூர்த்தி 2016-ல் பரமத்தி வேலூர் தொகுதியில் நின்று வென்றார். அப்போது மாவட்டத்தின் ஒரே திமுக எம்எல்ஏ அவர் மட்டும் தான். அதை வாய்ப்பாக பயன்படுத்தி அதிமுக அமைச்சர் தங்கமணியுடன் நட்பு பாராட்டினார். இருந்த போதும் 2021-லும் அவருக்கு தலைமை சீட் கொடுத்தது. ஆனால், இம்முறை அவரால் வெல்லமுடியவில்லை. மேற்கு மாவட்டத்தில் வரும் குமாரபாளையத்தில் தங்கமணி மீண்டும் வெற்றிபெற்றார். திருச்செங்கோட்டில் மட்டும் திமுக கூட்டணி கட்சியான கொமதேக நூலிழையில் வெற்றிபெற்றது.