மோதல் முற்றிய நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு பாமக பொருளாளர் திலகபாமா மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: ராமதாஸ் அதிரடி

1 day ago 2

பாமகவில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்தில் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். ‘‘வளர்த்த கிடா மார்பில் பாய்ந்து விட்டது, பெற்றதாய் என்றும் பாராமல் பாட்டிலால் தாக்கினார், மூச்சு விடாமல் பொய் பேசுபவர், தலைமை பண்பு இல்லாதவர், பாஜ கூட்டணிக்காக மனைவியுடன் என் காலில் விழுந்தார், தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அவரை கட்சியில் இருந்தே நீக்குவேன்’’ என்று பகிரங்கமாக தெரிவித்தார். இவ்வாறு அன்புமணிக்கு எதிரான தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ராமதாஸ், அன்புமணிக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள் 25க்கும் மேற்பட்டோரை நீக்கி மாற்று நபர்களை நியமிக்கவும் முடிவெடுத்தார்.

இதுதொடர்பாக ஆலோசிக்க மூத்த நிர்வாகிகள் சிலருக்கு நேற்று முன்தினம் இரவே அழைப்பு விடுத்தார். ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் யாரும் வராமல் புறக்கணித்தனர். இதனால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கும் முடிவுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் ராமதாஸ் கடும் விரக்தியில் உள்ளதாக தகவல் வெளியானது. கட்சியின் விதிகள் தனக்கு சாதகமாக இருந்தாலும் நிர்வாகிகளின் ஆதரவு மிகவும் குறைவாக உள்ளதால் தனது திட்டத்தை விரைந்து செயல்படுத்த முடியாத நிலை நிறுவனருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும் அன்புமணியை செயல் தலைவராக அறிவித்தபோது தன்னை விமர்சித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த மாநில பொருளாளர் திலகபாமாவை அதிரடியாக நீக்கம் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை புதிய பொருளாளராக நியமித்தார். இவர் ஏற்கனவே 2001 முதல் 2003 வரை பாமக பொருளாளராக பதவி வகித்ததோடு தற்போது மாநில துணைத் தலைவராகவும் பணியாற்றி  வருகிறார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ மயிலம் சிவக்குமாரை ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த வடக்கு மாவட்டத்தை முற்றிலுமாக நீக்கி, விழுப்புரம் மத்திய மாவட்டமாக மாற்றி புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்து உள்ளார்.

மேலும், அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தமிழ்மாறனை நீக்கி, புதிய மாவட்ட செயலாளராக காடுவெட்டி ரவியையும், மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருந்த சித்தமல்லி பழனிசாமியை நீக்கி, புதிய மாவட்ட செயலாளராக பாக்கம் சக்திவேலையும், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ராஜை நீக்கி, புதிய மாவட்ட செயலாளராக ஆறுமுகத்தையும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணனை நீக்கி புதிய மாவட்ட செயலாளராக கோவிந்தராஜையும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த பிரகாஷை நீக்கி புதிய மாவட்ட செயலாளராக சங்கரையும் ராமதாஸ் நியமித்து உள்ளார்.இதேபோல், திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவராக இருந்த பாண்டுரங்கனை நீக்கி ராமனையும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக இருந்த பச்சையப்பனை நீக்கி ஜோசுவாவையும் நியமித்து உள்ளார்.

* தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

‘சமூக ஊடக பேரவை கூட்டத்தில் 6 பேரை அடிக்கிறதுக்கு நான் வைத்திருப்பதாக அன்புமணி கூறியுள்ளார். என்னை பற்றியும், சிவப்பிரகாசம், ஜிகே மணி பற்றியும் தவறாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவு போட்டிருந்தனர். நான் யாரையும் அடிப்பேனா, 32 மாவட்டத்துக்கும் போய் அவர்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு அளவளாவி வந்தவன் நான், இதுபோன்ற அடிதடிகளில் நான் போனதுகூட கிடையாது’ என்று ராமதாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில், ராமதாசுக்கு எதிராக நிர்வாகிகள் கிளம்பியுள்ளதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்க கூடாது என்று கருதி தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தோட்டத்தின் நுழைவாயில் முன்பு நேற்று எஸ்ஐக்கள் உள்பட 6 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

* ராஜினாமா கடிதத்துடன் வந்த சேலம் எம்எல்ஏ அருள்

தைலாபுரம் தோட்டத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ராமதாசின் மூத்தமகள் காந்திமதி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், முன்னாள் மாநில தலைவர் தீரன், வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், புதுச்சேரி கணபதி, விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வடக்கு மாவட்ட தலைவர் புகழேந்தி, அரியலூர் காடுவெட்டி ரவி, திருப்பூர் சையத் மன்சூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர்.

வெளியே வந்த முன்னாள் தலைவர் தீரன், இருவரும் ஒன்றாக சேர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்றார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய கடிதத்துடன் வந்திருந்த சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் வெளியில் வந்ததும், இரண்டு பேரின் மனதிலும் எனக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய நினைத்தேன். அதற்கு ராமதாஸ் வேண்டாம். தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என எனக்கு அறிவுறுத்தியதால் எனது ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டேன் என்றார்.

* ‘நிர்வாகிகளை நியமிக்கவும் நீக்கவும் ராமதாசுக்கே அதிகாரம்’

ராமதாசை சந்தித்தபின் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் அளித்த பேட்டி: பாமக இது போன்று எத்தனையோ நெருக்கடிகளை கடந்த இயக்கம். நிச்சயமாக இதனையும் கடந்து வருவோம். நான் உட்பட நிர்வாகிகளை, நியமிக்கவும், நீக்குவதற்குமான உச்சபட்சமான அதிகாரம் பெற்றவர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இதற்கு மேல் உங்களிடம் ஆயிரம் கேள்விகள், பதில்கள் இருக்கிறது, இதனை பகிர்ந்து கொள்வதற்கான நேரம் இதுவல்ல. அதற்கான நேரம் மிக விரைவிலே அமையும். அப்போது மகிழ்வோடு பல செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் மீண்டும், மீண்டும் சொல்கிறோம், பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கிற ஒவ்வொருவரும் மிகுந்த மன உளைச்சலில், விரக்தியின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த நிலைமை சீக்கிரம் சரியாகிவிடும். 15 நாளில் நல்ல செய்தியோடு, அன்புமணி இங்கு வருவார். மற்றதை அவர் விளக்கமாக பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

The post மோதல் முற்றிய நிலையில் அன்புமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு பாமக பொருளாளர் திலகபாமா மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: ராமதாஸ் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article