மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், 'விருஷபா'. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ராகிணி திவேதி, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.வி.எஸ் ஸ்டுடியோ சார்பில் அபிஷேக் வியாஸ், பர்ஸ்ட் ஸ்டெப் மூவிஸ் சார்பில் ஷியாம் சுந்தர், பாலாஜி டெலிபிலிம்ஸ் சார்பில் ஏக்தா கபூர், கனெக்ட் மீடியாவுக்காக வருண் மாத்தூர் இணைந்து தயாரிக்கின்றனர். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தின் மைசூர் படப்பிடிப்பில் 3000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளதாக நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்திருந்தார். நேகா சக்ஸேனா தமிழில், லொடுக்கு பாண்டி, ஒரு மெல்லிய கோடு, வன்முறை உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
காதல், பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு நேர் எதிர் உணர்ச்சிகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த"விருஷபா" திரைப்படம் உருவாகி வருவதாகத் தகவல். மேலும், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகவும், அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தியும் இப்படம் தயாராவதாகவும் கூறப்படுகிறது. மது பிரசாந்த் பிள்ளை இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்'"விருஷபா" படம் ஆக்ஷன் என்டர்டெயினராகும். ஒவ்வொரு சவாலையும் வெற்றியாக மாற்றிய படத்தின் இயக்குனர் நந்த கிஷோருக்கும், அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி. மறக்க முடியாத பயணத்திற்கு தயாராகுங்கள்! இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் சந்திப்போம். வாழ்நாள் முழுவதும் பயணிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.