
மும்பை,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணி பெற்ற வெற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்று வரும் வேளையில் இந்த தொடரில் நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவங்களுக்கான பதிலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை இரண்டு முறை கேப்டன் ரோகித் சர்மா மைதானத்திலேயே வைத்து திட்டிய சம்பவம் நேரலையில் ஒளிபரப்பாகி அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை சந்தித்தது.
இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது விளக்கத்தினை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கும் வீரர்கள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆடுகளத்தில் நாங்கள் கோபப்பட்டு பேசும் ஒரு சில வார்த்தைகள் யாரையும் வேண்டுமென்றோ காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, தற்பெருமைக்காகவோ அல்ல. அது விளையாட்டின் மீதான ஆர்வத்தின் வெளிப்பாடு மட்டுமே. எனவே சில சமயம் ஆடுகளத்தில் உணர்ச்சிகளின் மிகுதியில் வார்த்தைகள் வெளிப்படும்.
அதன் போக்கில்தான் நானும் சென்று கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு தனிப்பட்ட முறையில் யாரையும் திட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அணியில் இருக்கும் வீரர்கள் அவர்களது பொறுப்புகளை உணர்ந்ந்து விளையாட வேண்டும். ஒரு சில சமயம் அது தவறும்போது கேப்டனாக எனக்கு சற்று கோபம் ஏற்படும். அந்த வகையில்தான் நான் அந்த வார்த்தைகளை உதிர்த்து இருப்பேனே தவிர மற்றபடி அவரை கடிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது" என்று கூறினார்.