வீரவநல்லூர், மே 20:மேலப்பாளையம் ராஜாநகரைச்சேர்ந்த அலிபா மகன் நசீர் (30). இவரது நண்பர் அதே பகுதி யூனியன் தெருவைச் சேர்ந்த முகமது அலி மகன் இக்ரீஷ் பாதுஷா (31). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினர். நள்ளிரவு பைக்கில் மேலச்செவலை அடுத்த கொழுமடை அருகே வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கில் இருந்து நசீரும், இக்ரீஷ் பாதுஷாவும் தூக்கி வீசப்பட்டனர். நசீர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்ரீஷ் பாதுஷா என்பவருக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நசீர் சம்பவ இடத்திலேயே பலியாகி கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அறிந்தனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நசீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முன்னீர்பள்ளம் போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேலச்செவல் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.