
புதுடெல்லி,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து மராட்டிய மாநில தலைநகர் மும்பைக்கு புல்லட் ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த 24-ந் தேதி, ஆமதாபாத் அருகே இப்பணி நடந்தபோது, கிரேன் நழுவி, அருகில் உள்ள ரெயில் பாதையில் விழுந்து ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை சுட்டிக்காட்டி, ரெயில்வே வாரியம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சமீபத்தில், மேற்கு ரெயில்வேயில் கர்டர் பொருத்தியபோது விபத்து நடந்துள்ளது. அதை ரெயில்வே வாரியம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. சாலை மேம்பால கட்டுமான பணிகளின்போது, விரிவான பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கிரேன்கள் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கிரேன்களின் தாங்குதிறன் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த 10 நாட்களில், ஏதேனும் மேம்பால கர்டர் பொருத்த வேண்டி இருந்தால், அதுபற்றி உரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.