மூதாட்டியின் வீட்டில் 17 பவுன் நகை - ரூ.3 லட்சம் திருட்டு

15 hours ago 3

திருப்பூர்,

திருப்பூர்-காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு மணியக்காரம்பாளையம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவருக்கு சொந்தமான 17 வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வாடகையை வைத்து அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது 2 மகன்களுக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வள்ளியம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவச் செலவிற்கு பணம் எடுத்து வருமாறு வள்ளியம்மாள் தன்னுடைய மகனான ரவிக்குமாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து ரவிக்குமார் தனது தாயார் குடியிருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பகுதி கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து நல்லூர் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article