எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் - பா.ம.க. அருள்

1 day ago 2

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவராக நியமித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, பொதுக்குழு மேடையிலேயே, அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், கடந்த மாதம் 10-ந்தேதி அன்புமணி ராமதாசின் தலைவர் பதவியை பறித்து ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில், தருமபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், 'கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்' என மன வேதனையுடன் பேசினார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று நிருபர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பரபரப்பு பேட்டி அளித்தார்.

தந்தை-மகன் மோதலால் பா.ம.க.வுக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே சமரசம் ஏற்படுமா என நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்த பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத வகையில் பா.ம.க.வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலிலும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நெருக்கடியிலும் இருக்கிறேன் என்று கூறினார்.

அதே போல சேலம் தெற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தனது கோரிக்கை மற்றும் முடிவை தெரிவிக்க ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் ராமதாசும், அன்புமணியும் ஒன்று சேராவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article