மூணாறு: மூணாறு சுற்றுலா வளாகத்தில் கணேசன் என்ற காட்டுயானை புகுந்ததால் சுற்றுலாப்பயணிகள் அலறியடித்து ஓடினர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறில் காட்டுயானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் நுழையும் யானைகள், விவசாய பயிர்களையும், வாகனங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. குண்டளை, செண்டுவாரை, எக்கோ பயிண்ட், மாட்டுப்பெட்டி, பெரியவாரை, கன்னிமலை, தலையார் போன்ற பகுதிகளில் சுற்றித்திரியும் படையப்பா என்ற ஆண் காட்டுயானை தொழிலாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பரபரப்பான சுற்றுலா மையமான நல்லதண்ணி டீ மியூசியம் அருகே கணேசன் என்ற காட்டுயானை திடீரென நேற்று முன்தினம் நுழைந்தது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். யானை நுழைந்த பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்புகள் உள்ளன. வனத்துறையினர் உடனடியாக யானையை விரட்டியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
The post மூணாறு சுற்றுலா மையத்தை முற்றுகையிட்ட ‘கணேசன்’ சுற்றுலாப்பயணிகள் அலறி ஓட்டம் appeared first on Dinakaran.