
சென்னை,
நான் படம் நடிப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ் மக்கள் போட்ட பிச்சை என்று நடிகர் பாலா கூறி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தில் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் 2 வீடு கட்டி கொடுத்த பாலா, நேற்று தனது பிறந்தாளை முன்னிட்டு அந்த வீட்டை குடும்பத்தினருக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"மூச்சு இருக்கும்வரை மக்களுக்கு உதவி செய்வேன். நான் படம் நடிப்பதற்கு முக்கியமான காரணம், தமிழ் மக்கள் போட்ட பிச்சை. அந்த சம்பளத்தில் இருந்துதான் இன்று இரண்டு வீடு கட்டி கொடுத்திருக்கிறேன். இந்த பிறந்த நாள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்'' என்றார்
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் அடுத்தப்படியாக கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அதாவது, 'ரணம் - அறம் தவறேல்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஷெரீப்பின் 'காந்தி கண்ணாடி' படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.