சிவகங்கை, ஜன. 22: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காரைக்குடிக்கு வந்த நிலையில் இன்று சிவகங்கை நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 40ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமதி லெட்சுமி வளர் தமிழ் நூலகம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பேசினார்.
மாலை காரைக்குடி தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலந்துரையாடினார். இரவு காரைக்குடியில் தங்கிய அவர் இன்று காலை 9 மணிக்கு சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் காணொலி காட்சி மூலம் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் சிவகங்கையில் திருவுருவச்சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
காரைக்குடியில் பகுத்தறிவுக் கவிஞன் முடியரசரனுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவச் சிலையை திறந்து வைக்கிறார். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியில் சீல்டு கால்வாய் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். காரைக்குடியில் இருந்து சிவகங்கை வருகை தரும் தமிழக முதல்வருக்கு குன்றக்குடி, திருப்பத்தூர் பைபாஸ் சாலை சந்திப்பு, அரளிக்கோட்டை, ஒக்கூர், சிவகங்கை எல்கை பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி, எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில் 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை வருகை: 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார் appeared first on Dinakaran.