சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகின்ற விழாவில் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சார்பில் வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சம்மந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (புதன்கிழமை) முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரையிலான 3 நாட்கள் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு எவ்விதமான டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் நெல்லை மாநகர பகுதியிலும் இன்று காலை 6 மணியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடைவிதித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.