சென்னை: முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பு :
- முதலமைச்சரின் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், ரூ.250 கோடியில் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 220 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலையாகவும், 550 கி.மீ. சாலைகளை இருவழிச் சாலையாகவும் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
- முதலமைச்சரின் அனைத்து பருவ காலங்களிலும் தங்கு தடையற்ற சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ், 84 தரைப்பாலங்கள், உயர்மட்டப் பாலங்களாக ரூ.466 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- ஆறுகளின் குறுக்காக தங்குத்தடையற்ற பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய 6 உயர்மட்டப் பாலங்கள் ரூ.295 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும்.
- ரயில்வே கடவுகளுக்கு மாற்றாக 10 ரயில்வே மேம்பாலங்கள் ஒரு கீழ்பாலம் ரூ.787 கோடியில் கட்டப்படும்.
- கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1,000 கி.மீ. நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும்.
- காலதாமதமின்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைப் பதற்கு ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் நிலஎடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 15 புறவழிச்சாலைகள், இணைப்புச் சாலை, சாலை மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.3 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
- எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரையிலான கடல்வழி இணைப்புப் பாலம் மற்றும் கோபிச்செட்டிபாளையம் இணைப்பு சாலை அமைக்க, மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் ரூ.4 கோடியில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
- சென்னை பெருநகர பகுதியில், உயர்மட்ட பாலம் மற்றும் புறவழிச்சாலை அமைக்க ரூ.258 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- சென்னை பெருநகர பகுதியில், பாடி அருகே “U’’ வடிவ சேவை சாலையும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.20 கி.மீ. தூரத்திற்கு ரூ.2100 கோடியில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
- நகராட்சிகள், நகரங்கள், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புற வழிச்சாலைகள் அமைக்கப்படுகிறது. தொடர்ச்சியாக கோயம்புத்தூர் புற வழிச்சாலை, திருநெல்வேலி புறவழிச்சாலை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுத்துறை, நாமக்கல், சங்கரன்கோவில், திருக்காட்டு பள்ளி, பாப்பாரப்பட்டி, வேலூர், சிவகாசி, மன்னார்குடி புறவழிச்சாலை பணிகள் ரூ.1713 கோடியில் மேற்கொள்ளப்படும்.
- மதுரை வெளிவட்ட சாலை சித்தம்பட்டி முதல் ஆலம்பட்டி வரை 48 கி.மீ. நீளச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
The post முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடியில் மாநில நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.