சென்னை: முதன்முறையாக ஹஜ் பயணம் செல்லும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 ஹஜ் மானியத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2024-25ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், முதன்முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஹஜ் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால், 14 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000 வீதம் 5,650 பயனாளிகளுக்கு இந்த மானிய தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலா ரூ.25,000க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post முதன்முறையாக ஹஜ் பயணம் செல்லும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.