சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப்பணித் துறை சார்பில் முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.525 கோடியில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2.6.2023 அன்று நடந்த கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியீட்டு விழாவில், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான கலைஞர் பெயரால் சென்னையில் புதிய உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாயில், 10,000 பேர் அமரக்கூடிய அளவில் 91,024 சதுர அடி பரப்பளவில் பொருட்காட்சி அரங்கம், 5,000 பேர் அமரக்கூடிய அளவில் 50,633 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம்,
1,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் முழுவதும் குளிரூட்டும் வசதி மற்றும் மின் ஆக்கி வசதி, மின்தூக்கி வசதி, 1638 சீருந்துகள் மற்றும் 1700 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.