தென்காசி: மழை குறைந்தாலும் நீர் வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க இன்று 6 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம்தேதி மாலை முதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மழையின் அளவு குறைந்திருந்தாலும், தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் இன்று 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மழை குறைந்ததையடுத்து இன்று அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து ஏராளமான பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஆனால் இன்று 6வது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் சென்றனர். சிலர் தங்கள் செல்போன்களில் அருவியை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
The post மழை குறைந்தாலும் நீர்வரத்து அதிகரிப்பால் குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.