முட்டம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்: 22 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

6 hours ago 3

குளச்சல்: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள்ரமேஷ் (50) என்பவர் விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை முடிந்து அருள் ரமேசின் விசைப்படகில் கடலில் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகினர். இரவு விசைப்படகு கடலுக்குள் சென்றது. விசைப்படகை முட்டத்தை சேர்ந்த லாரன்ஸ் 35 என்பவர் ஓட்டினார். மேலும் 21 மீனவர்கள் படகில் சென்றனர்.

இதையடுத்து இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் முட்டத்தில இருந்து 22 கடல்மைல் தொலைவில் அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெரிய சரக்கு கப்பல் திடீரென விசைப்படகு மீது உரசிவிட்டு சென்றது. இதனால் விசைப்படகு குலுங்கியதுடன் அதில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் விசைப்படகின் பின் பகுதியில் இருந்த கேரஸ் உடைந்து சேதம் அடைந்தது. பின்னர் மீனவர்கள் மீன் பிடிக்காமல் காலை கரை திரும்பினர். தொடர்ந்து விசைப்படகு முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த விசைப்படகை பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விசைப்படகு மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றது தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு கப்பல் என தெரியவந்துள்ளது. மேலும் சரக்கு கப்பல் விசைப்படகின் மீது மோதி இருந்தால் உயிரிழப்பு மற்றும் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

The post முட்டம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்: 22 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article