முசிறி, ஜூன் 12: திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கிராமப்புற பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என முசிறி தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதை எடுத்து தொகுதி எம்எல்ஏ நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு கவனத்திற்கு பொதுமக்களின் கோரிக்கையை கொண்டு சென்றார் இதையடுத்து அமைச்சர் நேரு பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற வளர்ச்சித் திட்ட துவக்க பணிகளுக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து தா.பேட்டை ஒன்றியத்தில் பூலாஞ்சேரி ஊராட்சி பாப்பாபட்டி முதல் பனங்காடு வரை 138.09 இலட்சம் மதிப்பீட்டிலும், பூலாஞ்சேரி முதல் சேருகுடி வரை 134.22 லட்சம் மதிப்பீட்டிலும், தாண்டவம்பட்டி முதல் கருப்பம்பட்டி சாலை வரை ரூ.45.76 லட்சம் மதிப்பீட்டிலும், முசிறி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வெள்ளூர் பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
அப்போது பூலாஞ்சேரியில் சமுதாயக்கூடம் அமைத்து தரவும், வெள்ளூர் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடன் விழாவிற்கு வந்திருந்த ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்களை அழைத்து பொதுமக்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, சேகரன், நகர செயலாளர் தக்காளி தங்கராசு, நிர்வாகி பிரபு, நிர்வாகிகள் சரவணன் நடேசன், செல்வம், மகாமணி, முசிறி ஊராட்சி ஒன்றிய ஆணையர் தர், பூலாஞ்சேரி ஊராட்சி மன்ற செயலார் ஜெயராஜ், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post முசிறி, தா.பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.61 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.