தஞ்சாவூர்: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேட்டூர் அணையில் முதல்வர் தண்ணீர் திறந்துவிட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் விதை நெல், இடுபொருட்கள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடைமடை வரை தண்ணீர் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.