முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா - கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்

6 hours ago 2

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா திருத்தலையூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. மழை காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீரால் இப்பகுதியில் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.

தற்போது இந்த ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் ஏரியில் கிராம மக்கள் மீன் பிடி திருவிழா நடத்திட முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று திருத்தலையூர், மேலகொட்டம், பேரூர், கண்ணனூர், பாளையம், ஜெம்புநாதபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் அங்கு குவிந்தனர்.

பின்னர் பொதுமக்கள் ஆரவாரத்துடன் ஏரியில் இறங்கி மீன்பிடித்தனர். கத்தா, சுருக்கு வலை, அரி வலை, கொசு வலை ஆகியவற்றின் உதவியோடு பொதுமக்கள் மீன்களை பிடித்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தற்போது கடலில் மீன் பிடி தடைக்காலம் அறிவித்துள்ள நிலையில் விற்பனைக்கு மீன்களின் வரத்து குறைவாக உள்ளதுடன் விலையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் திருத்தலையூர் ஏரியில் மீன் பிடி திருவிழா நடத்தியதால் சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஏரியில் மீன் பிடித்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

எங்கள் வலையில் கெண்டை, கெளுத்தி, சர்க்கார், விரால், சங்கரா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. வருடந்தோறும் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் இந்த வருடம் கடந்த ஆண்டை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read Entire Article