
மதுரை,
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை) 8.30 மணி அளவில் புறப்பட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு 11 மணியளவில் மதுரைக்கு வந்தடைந்து உள்ளார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
இதுபற்றி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழகத்தின் மதுரை நகரை வந்தடைந்து உள்ளேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிடப்பட்ட அமைப்பு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக பா.ஜ.க.வின் துடிப்பான நிர்வாகிகளை சந்திக்க ஆர்வத்துடன் உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
இதன்பின்னர் அவர், சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார். இன்று பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார்.
இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.