
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் சர்மா கொடுத்த 2 எளிதான கேட்ச் வாய்ப்புகளை குஜராத் வீரர்கள் கோட்டை விட்டனர். அந்த வாய்ப்பில் அதிரடியாக ஆடிய அவர் 81 ரன்கள் குவித்து அசத்தினார். குஜராத் அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் மும்பை அணிக்கு மட்டும் எப்படி முக்கிய நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கிறது? என்பது கண்டறியப்பட வேண்டிய ஒன்று என்று இந்திய முன்னாள் வீரரான அஸ்வின் கூறியுள்ளார். அதற்கு உதராணமாக கடந்த 2018 ஐ.பி.எல். தொடரில் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "ரோகித் சர்மாவுக்கு பிரசித் கிருஷ்ணா ஒரு கேட்சை தவறவிட்டார். பின்னர், குசல் மெண்டிஸ் சிராஜின் பந்துவீச்சில் ஒரு கேட்சை தவறவிட்டார். பின்னர், ரோகித்தை தடுக்க முடியவில்லை. கடவுள் கொடுத்த வாய்ப்பை ரோகித் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை நான் ஒவ்வொரு முறையும் ஒரு விஷயத்தை கவனித்து வருகிறேன்.
2018 சீசனில் மும்பைக்கு எதிராக நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போட்டியில் 13 ஓவரில் 80+ ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் மும்பை வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை. அப்போது திடீரென ராட்சத மின்விளக்குகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நிமிடங்கள் இடைவெளி உண்டானது.
மீண்டும் போட்டி தொடங்கியபோது பொல்லார்டு அடித்து நொறுக்கினார். அதனால் அவர்கள் 180 - 200 ரன்களை எடுத்தார்கள். கண்டிப்பாக அது போன்ற சமயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் மும்பைக்கு மட்டும் அது போன்ற சமயங்களில் எப்போதும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அவர்கள் எப்படி இந்தளவுக்கு அதிர்ஷ்டமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும்" என்று கூறினார்.