முக்காணி தாமிரபரணி ஆற்றில் பரிதாபம் கோயில் வருஷாபிஷேக விழாவிற்கு தீர்த்தம் எடுக்கவந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

1 day ago 6

ஆறுமுகநேரி, ஜூன் 1: குலையன்கரிசல் முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவுக்காக முக்காணி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுக்க வந்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த உறவினர்கள் உடலை வாங்கமறுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்த குலையன்கரிசல் கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கோகுல் (17) உள்பட 2 மகன்கள். இந்நிலையில் மூத்த மகனான கோகுல் ஊரில் உள்ள  முத்தாரம்மன் கோயிலில் இன்று நடைபெற உள்ள வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்தம் எடுப்பதற்காக விக்னேஷ், ராஜேஷ், முத்துகிருஷ்ணன் சண்முகம் ராஜ்குமார் உள்ளிட்ட ஊர் மக்களுடன் சேர்ந்து ஆறுமுகநேரி அடுத்த முக்காணி தாமிரபரணி ஆற்றுக்கு நேற்று காலை வந்தார். அங்கு தீர்த்தம் எடுப்பதற்காக நீரில் இறங்கிய சிறுவன், ஆழமான பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து பதறிய ஊர் மக்கள், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்துவந்த வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் துணையுடன் நீருக்குள் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிறுவனின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே கோகுல் உயிரிழந்தது தெரியவந்ததும் ஆவேசமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சிறுவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறுவன் உயிரிழப்பு ஏற்பட்ட இடம் ஆபத்தான பகுதி யாரும் செல்ல வேண்டாம் என அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post முக்காணி தாமிரபரணி ஆற்றில் பரிதாபம் கோயில் வருஷாபிஷேக விழாவிற்கு தீர்த்தம் எடுக்கவந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Read Entire Article