மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு: தமிழக அரசு தகவல்

1 day ago 3

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு விளங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2014ல் ‘Make in India’ திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025க்குள் உற்பத்தி துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25% ஆக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16% சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தி துறையில் இருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாக்ஸ்கான், பெகாட்ரான், சாம்சங், ஹூண்டாய், போர்ட், நிஸான், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. உலகளவில் புகழ்பெற்ற ஆப்பிள் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களில் 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல லட்சக்கணக்கான ஐபோன்களை உற்பத்தி செய்கின்றனர்.

அதேபோல், நைக் நிறுவனத்திற்கான பொருட்களை தயாரித்து வழங்குவதில் முதன்மை நிறுவனமாக இருக்கும் பெங் டே நிறுவனம் 37,000 பணியாளர்களுடன் பல தொழிற்சாலைகளை இயக்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 31,000க்கும் மேற்பட்ட செயல்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளன, இதுதான் இந்தியாவில் அதிகமான எண்ணிக்கை ஆகும். இந்தியாவின் 41% மின்னணு சாதன பொருட்கள், 38% காலணிகள் மற்றும் 45% வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டின் உற்பத்தி துறையின் சிறப்பான வளர்ச்சியினால் இந்தியாவில் 9.69 விழுக்காடு மாநில உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது. இந்த சாதனைகள் ஓரிரவில் நடந்தது அல்ல. மாநில அரசு தொடர்ந்து துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி போன்றவை), சாலை வலையமைப்புகள் மற்றும் தொழிற்துறை நிலங்களில் முதலீடு செய்துள்ளது. 1971ம் ஆண்டு திமுக அரசால் நிறுவப்பட்ட சிப்காட் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம்) தொழிற்பூங்காக்களை உருவாக்கி, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை உற்பத்திதுறை தேசிய அளவில் பிரபலமாகும் முன்பே உயர்த்தி இருந்தது.

இதனால், முதலீட்டாளர்கள் வருவதற்கு முன்பே அவர்களுக்கான நிலம் மற்றும் அடிப்படை வசதிகள் தயாராக இருந்தன. கோயம்புத்தூர் (பொறியியல் பொருட்கள்), சென்னை (வாகனங்கள்), திருப்பூர் (துணிகள்) போன்ற நகரங்கள் சிறப்பு துறை மையங்களாக உருவெடுத்தன. தமிழ்நாடு அரசின் Guidance Tamil Nadu என்பது ஒரு முழு சேவை முதலீட்டு மையமாகும். பல மாநிலங்களில் ‘ஒற்றை சாளர அனுமதி’, ‘முதலீட்டாளர் மாநாடுகள்’ என்பவை வெறும் பிரசாரமாக இருந்தாலும், தமிழ்நாடு நடைமுறையில் இதை செயல்படுத்துகிறது.

‘Guidance Tamil Nadu’ நிறுவனங்களுக்கு நிலம், அனுமதிகள், தொழிலாளர் பிரச்னைகள் மற்றும் அன்றாட செயல்பாட்டு சிக்கல்களுக்கு உதவுகிறது. இந்த விரைவான மற்றும் திறமையான அணுகுமுறை, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசும் அரசு பணியாளர்களும் தடையாக இல்லாமல், விரைவான தீர்வுகளை வழங்குகின்றனர். மத்திய அரசு மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தபோது, தமிழ்நாடு ஒரு வாரத்திற்குள் தனது திட்டத்தை அறிவித்து, மின்னணு சாதனங்களின் ஏற்றுமதியை தற்போது உள்ள $14 பில்லியனில் இருந்து $100 பில்லியனாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தது.

மேலும், அரசியல் மற்றும் நிர்வாக தலைமை தொழிலாளர் பிரச்னைகளுக்கு சமரச தீர்வுகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, சாம்சங் தொழிற்சாலையில் வேலைநிறுத்தம் ஏற்பட்டபோது, அரசு தலையிட்டு விரைவாக தீர்வு கண்டது அரசின் செயலூக்கமுள்ள நடைமுறையை காட்டுகிறது. தமிழ்நாடு 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடே இந்தியாவில் உற்பத்திதுறையில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு வழிக்காட்டும் மாநிலமாக இருக்கிறது.

ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களுக்கிடையேடான போட்டியில், தமிழ்நாட்டின் வெற்றி பாடங்களை பின்பற்றினால், இந்தியா விரைவில் உற்பத்தி துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு ஆடைகள், வாகன உற்பத்தி, பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதால் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக உயர்ந்துள்ளது.

* இந்தியாவின் 41 சதவீத மின்னணு சாதன பொருட்கள், 38 சதவீத காலணிகள் மற்றும் 45 சதவீத வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தமிழ்நாட்டில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

* தமிழ்நாட்டின் உற்பத்தி துறையின் சிறப்பான வளர்ச்சியினால் இந்தியாவில் 9.69 விழுக்காடு மாநில உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தி நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக இருக்கிறது.

The post மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளை படைத்து நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article