நாகை: மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் இருந்து 595 விசைப்படகுகளில் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்வர். இதுதவிர பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் தொடர்ந்து ஈடுபடுவர்.
தடைகாலம் முடிந்து ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்துவது இலங்கை அரசும், இலங்கை கடற்கொள்ளையர்களும். எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் பறித்து செல்கின்றனர். மேலும் இலங்கை அரசு விசைப்படகுகளை பறிமுதல் செய்து மீனவர்கள் மீது வழக்குப்பதிந்து சிறையில் அடைப்பதால் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.
எனவே மீன்பிடி தொழிலுக்கு செல்வதற்கு முன்பு ஒன்றிய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திர நாட்டார் கூறியதாவது: தமிழ்நாடு அரசு மீனவ மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் சூரை மீன்பிடி துறைமுகம் கட்டி முதல்வர் அர்ப்பணிப்பு செய்தது வரவேற்கத்தக்கது.
2018ம் ஆண்டிலிருந்து 229 மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை விடுவிக்காமல் உள்ளது. இனிவரும் காலங்களில் மீனவர்களுக்கு இலங்கை அரசு இன்னல்கள் தராமல் இருக்க ஒரே வழி கச்சத்தீவை மீட்பது தான்.புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்துக்காக ரூ.216.57 கோடியில் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளனர். கடல் நடுவே பயங்கர ஆயுதங்களால் தாக்கி வெறியாட்டமாடி கொள்ளையடித்து செல்லும் கொடுஞ்செயல்களை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை தடுக்க ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும்: தமிழக மீனவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.