மும்பை: மகாராஷ்டிரா மண்ணில் பிறந்த 3 பென்குயின்களுக்கு மராத்தியில் பெயர் வைக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வீரமாதா ஜிஜாபாய் பாசேல் உயிரியல் பூங்காவிற்கு (பைகுல்லா மிருகக்காட்சிசாலை) கடந்த 2016ம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து எட்டு ஹம்போல்ட் பென்குயின்கள் கொண்டுவரப்பட்டது. அவற்றுக்கு டொனால்ட், டெய்ஸி, போப்பய், ஆலிவ், பிளிப்பர், பபிள், மிஸ்டர் மோல்ட் மற்றும் டோரி போன்ற ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டன.
இந்த பென்குயின்கள் மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஆனால் அவற்றின் ஆங்கில பெயர்கள் குறித்து எப்போதும் எவ்வித சர்ச்சையும் எழவில்லை. ஆனால் 2023ம் ஆண்டு மூன்று பென்குயின் குட்டிகள் பிறந்தபோது, அவற்றுக்கு கோகோ, ஸ்டெல்லா மற்றும் ஜெர்ரி என்ற ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டன. இதுவும் எவ்வித விவாதத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், கடந்த மார்ச் மாதம் பிறந்த மூன்று புதிய பென்குயின் குட்டிகளுக்கு நோடி, டாம் மற்றும் பிங்கு என்ற ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் பாஜக தலைவர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
குறிப்பாக பைகுல்லா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நிதின் பன்கர், பென்குயின்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மராத்தி பெயர்களான ஆது, சஞ்சு மற்றும் தேஜு என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி மிருகக்காட்சிசாலை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகாராஷ்டிரா மண்ணில் பிறந்த இந்த பென்குயின்கள் மராத்தி மொழி மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவற்றிற்கு பெயரிடப்பட வேண்டும் என்று எம்எல்ஏ பன்கர் வலியுறுத்தினார்.
மும்பை மாநகராட்சி தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், மொழி மற்றும் கலாசார அடையாளம் தொடர்பான அரசியல் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மிருகக்காட்சிசாலை நிர்வாகம் சார்பில் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
The post மகாராஷ்டிரா மண்ணில் பிறந்த 3 பென்குயின்களுக்கு மராத்தியில் பெயர் வைக்கணும்: ஆங்கிலத்தில் பெயர் வைத்ததால் போராட்டம் appeared first on Dinakaran.