
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-10-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வது கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது வருத்தமளிக்கிறது.
எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை கேட்டுக்கொள்கிறேன். மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினைக் கொண்டுவரும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.