
லக்னோ,
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் வகித்த பொறுப்புகளைப் பறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார். தான் உயிரோடு இருக்கும் வரை அரசியல் வாரிசை அறிவிக்கப்போவது இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சகோதரரின் மகனான ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்து கட்சியில் முக்கிய பொறுப்பு அளித்த மாயாவதி, கடந்தாண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு அவரின் கட்சிப்பொறுப்புகளை பறித்து சில மாதங்களில் மீண்டும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு பெரிய தலைமை மாற்றமாக, பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) உள்ள அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற முக்கிய கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த, ஆகாஷ் ஆனந்தின் தந்தையும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஆனந்த் குமாரையும், மாநிலங்களவை எம்பி ராம்ஜி கவுதமையும் புதிய தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக பகுஜன் சமாஜ் கட்சி நியமித்துள்ளது.